Tuesday, August 11, 2009

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்

சுவரும் இல்லாமல்
ஆணியும் இல்லாமல்
பிடிமானமும் இல்லாமல்
தொங்குகிறது .கண்ணாடி
நீ சிரிக்கிறாய்
உன் எதிரில் இருப்பவனும்
சிரிக்கிறான்.

********
ஓய்ந்ன் அருந்திய
கோப்பையின் அடியில்
எஞ்சி இருக்கும்
நூற்றண்டுக்கு முந்திய்
திராட்சை கொடியின்
சிறு பகுதி .

*************.
கிளையை பிடித்து தொங்காதே.
கிட்டத்தட்ட
127 ஆண்டுகள் பழையது இந்த மரம் .
ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை.

***********
குட்டி தவளைகள்
குட்டி பூச்சியை வுன்க்கிறது
குட்டியான வாயால்
குட்டியான சப்தங்களை
எழுப்புகின்றது .
தம் குட்டியான கால்களால்
குட்டியான வுயரத்தை
குட்டியான நீளத்தை
தாவுகின்றன .
பெரிய தவளைகளும் அப்படியே
யாவற்றிலும் பெரிய ....

********
அவன் சிலநேரம்
காற்றில் அப்படியும் இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள் உதிர்கின்றன.

*****.
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
நூறாண்டுக்கு பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன்
நூறாண்டுக்கும் முன்
யாரோ புதைத்து வைத்த
ஓயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .

*****.
பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிற துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கி பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .

*****
கொஞ்சம் அரிசியையும்
கட்டு சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்
அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது
என்னால் அப்போதைக்கு .

*****
ஆறு மாதத்திற்கு பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் .....
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ .....
என் தியானம்
எப்படி கழியும் அமைதியுடன் .

*****
வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்து கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .

*****
வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பை
பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும்
துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டு கொண்டிருந்தன .

*****
தொடர்ந்து இயற்கையை
அவதானித்துக் கொண்டிருந்தேன்....
.........தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம்
கையளித்துவிட்டுசெல்கிறேன் .
மரங்களும் தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருகின்றன .

*****.
என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன் .
தியானம் இப்போது
மூலையிலிருந்து .
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .

*****
தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து
வெவ்வேறு கிணறுகளிலிருந்து
வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ........
நான் குளித்த கிணற்றில்
நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் ...........
நான் குளித்த கிணற்றில் 27தவளைகளும் ,
நீர் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.

******
பனிப்பிரதேசத்தின் குளிர்காலை
ஏரியில் முழுக்க
நிரம்பியிருக்கின்றன கொக்குகள் .
உற்று நோக்குங்கள்
ஒரு கொக்குமில்லை .

*****
ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது .
கால்களை
நீருக்குள் அமிழ்த்தியிருக்கும்
கொக்குகளை வரைகிறான்

*****

1 comment:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஏற்க்கெனவே படித்ததுதான் என்றாலும் ,மீண்டும் ரசித்தேன் .எழுத்துப் பிழைகளைக் கவனிக்கலாமே.