Tuesday, September 7, 2010

கவிதை


முதலை

------------

உப்புநீர் முதலையொன்று துயில்கிறது.

தலையை நீருக்குள்ளும் ,
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் துவங்கி
கோடைகாலம் வரை நீண்டிருந்தது .

கொக்குகள்
------------
வெந்நிற கொக்குகள்
பறந்தபடியிருகின்றன .
உயர ...உயர
மிகமிக உயர
இப்போது
வெந்நிற மேகங்கள்
பறந்தபடியிருகின்றன .
இறக்கைகளை அசைத்தபடி
தத்தம் கால்களை மடக்கியபடி.


தார்சாலைகள் ,வெந்நிற கோடுகள்
------------------------------------------
வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்சாலைகள்
அதன் நடுவே
வலப்புறத்தையும் ,
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெந்நிறக் கோடுகள்
எப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .
சில வரிக்குதிரைகள்
வரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில
தார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்


நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .

கற்களின் சாயல்

---------------------
எல்லா கற்களிலும்
ஏதோ உருவமொன்றின்
சாயல் தெரிகிறது .
இதுவரை அச்சாயல்கொண்ட
உருவங்களுக்கும் ,உங்களுக்குமான
சந்திப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை
இதுவரை
நீங்கள் சந்தித்த உருவங்களின்
சாயல் கொண்ட கற்கள்
வேறொருவனின் கைகளிலிருகின்றன .
இப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்
இருப்பது போலவே .

பதிவேடு
-----------
பறவையொன்று
விட்டுச் சென்ற
சிறகொன்றையெடுத்துவந்து
உன் மைக்கூட்டில்
சொருகியிருக்கிறாய்
எப்போதேனும் சிறகுமுனையில்
மைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை
எழுதி வைகிறாய்
உன் பதிவேடு காலியாயிருக்கிறது .
உன் குறிப்புகள் எப்போதும்
அந்தரத்தில் மிதந்தபடியிருக்கின்றன

உப்பளம்
------------
உப்பளத்தில் அமர்ந்து
அழுது கொண்டிருந்தாள்.
ஒருவன் அவள் அழுகையைப்
பிரித்துப்பிரித்து
பாத்திக்கட்டிக் கொண்டிருந்தான்.
சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன
அவள் அழுகையை
வெவ்வேறு ஊர்களுக்கு
ஏற்றிச் செல்லவிருக்கும்
லாரிகள் ....
லாரிகள் ....

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .