Monday, August 9, 2010


வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
----------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்

1853 சூன் 7ம் திகதி 137 ம் பக்கம்.

கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய

வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .

7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில் அது வீழ்த்தப்பட்டது .

கொல்கத்தா அருங்காட்சியகத்தில்

இப்பவும் வைஸ்ராயின் டைரி இருக்கிறது

இரண்டு அறைகள் தாண்டி

கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி பேழைக்குள்

வரியேரிய அப்புலியின் உடல்

தைலம் பூசி பாதுகாக்கப்பட்டு வருகிறது .

டைரி குறிப்பின் சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு

இரண்டு வரிக்கு முன்னால்

உறுமலுடன் புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .

வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்

முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும்

பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.

பலநூறு மைல்கள் தாண்டி

கானகத்திற்குள் அதன் எலும்புகளை வைத்து

பழங்குடியொருவன் தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.

எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .

திரு .பெலிக்ஸ்

------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான 63வயது திரு .பெலிக்ஸிடம்

177ஆண்டுகள் பழமையான மது புட்டியொன்று கிடைத்தது .

அவரின் 23ம் வயதில்

பொலிவிய நாட்டு கடற்பயண நண்பனொருவன்

அதை பரிசளித்தான் .]


இதுவரைஅம்மதுவை

3முறை மட்டுமே அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை

அப்போது அம்மது இனிப்பு சுவையுடையதாயிருந்தது


37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....

அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .


தன் 58வயதில்

சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்

அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது


கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த அம்மதுவை

தன்80வது பிறந்த நாளில் அருந்த திட்டமிட்டிருந்தார் .

அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை தான் அறிவேனென நம்பிகொண்டிருந்தார் .


ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .

மிச்சம் இருந்த மதுவைகுவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .

17ஆண்டுகள் மீதமிருந்தது . .


No comments: