Friday, May 22, 2009

உயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)




முதலை



----------



உப்புநீர் முதலையொன்று துயில்கிறது .



தலையை நீருக்குள்ளும் ,



உடலை வெண்மணலிலும்



கிடத்தியபடி



அப்போது அதனுடல்



கார்காலத்தில் துவங்கி



கோடைகாலம் வரை நீண்டிருந்தது .





கொக்குகள்



------------



வெந்நிற கொக்குகள்



பறந்தபடியிருகின்றன .



உயர ...உயர



மிகமிக உயர



இப்போது



வெந்நிற மேகங்கள்



பறந்தபடியிருகின்றன .



இறக்கைகளை அசைத்தபடி



தத்தம் கால்களை மடக்கியபடி.





தார்சாலைகள் ,வெந்நிற கோடுகள்


-------------------------------------------


வனங்களின் நடுவே


போடப்பட்ட தார்சாலைகள்


அதன் நடுவே


வலப்புறத்தையும் ,


இடப்புறத்தையும்


பிரித்துச் செல்லும்


வெந்நிறக் கோடுகள்


எப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .


சில வரிக்குதிரைகள்


வரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில


தார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்




நடன ஒத்திகை


--------------------


37,38 யென


கடந்து கொண்டிருந்தது வயது .


முந்தைய நாள்


பள்ளி ஆண்டுவிழாவிற்கென


நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த


பதினொன்றாவது படிக்கும் மகள்


காலையில் பள்ளிக்குப் போனதும்


வீட்டில் யாரும் இல்லை


அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .


தன் மகளை போலவே


உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.


அழைப்பு மணியை யாரோ அடிக்கும்


ஓசை கேட்டதும்


வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .




கற்களின் சாயல்


---------------------


எல்லா கற்களிலும்


ஏதோ உருவமொன்றின்


சாயல் தெரிகிறது .


இதுவரை அச்சாயல்கொண்ட


உருவங்களுக்கும் ,உங்களுக்குமான


சந்திப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை


இதுவரை


நீங்கள் சந்தித்த உருவங்களின்


சாயல் கொண்ட கற்கள்


வேறொருவனின் கைகளிலிருகின்றன .


இப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்


இருப்பது போலவே .




பதிவேடு


-----------


பறவையொன்று


விட்டுச் சென்ற


சிறகொன்றையெடுத்துவந்து


உன் மைக்கூட்டில்


சொருகியிருக்கிறாய்


எப்போதேனும் சிறகுமுனையில்


மைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை


எழுதி வைகிறாய்


உன் பதிவேடு காலியாயிருக்கிறது .


உன் குறிப்புகள் எப்போதும்


அந்தரத்தில் மிதந்தபடியிருக்கின்றன




உப்பளம்


------------


உப்பளத்தில் அமர்ந்து


அழுது கொண்டிருந்தாள்.


ஒருவன் அவள் அழுகையைப்


பிரித்துப்பிரித்து


பாத்திக்கட்டிக் கொண்டிருந்தான்.


சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன


அவள் அழுகையை


வெவ்வேறு ஊர்களுக்கு


ஏற்றிச் செல்லவிருக்கும்


லாரிகள் ....


லாரிகள் ....








வண்ணத்துப்பூச்சி


---------------------


17வருடம் கழித்து பார்த்தேன்.


எதிர் திசையில்


அவள் மகளோடு போய்கொண்டிருந்தாள்


பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை .


அந்த கணம்


அவள் முகத்திலிருந்து


வயதான வண்ணத்துப்பூச்சியொன்று


வெளியேறி பறந்து செல்கிறது


வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி


சற்றே பதட்டமாய் .






பிரசவ வார்டு


---------------------


மருத்துவமனை பிரசவ வார்டில்


பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்


ஈனும் வலியில்


"அம்...மா" வென அலறியது


பெண் எறும்பொன்று


அதே வார்டில்


பிள்ளைப் பெற்றிருந்தவளை


பார்க்க வந்திருந்தவர்கள்


எடுத்து வந்திருந்த பாட்டிலில்


ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன


சில எறும்புகள்


பிள்ளைத்தாச்சிக்கென ...


பிள்ளைத்தாச்சிக்கென .

No comments: