Thursday, May 21, 2009

காலச்சுவடு இதழ் 92 ல் வெளியான 3 கவிதைகள்



1



புத்தகத்தின்


73ஆம் பக்கம்


கிழிக்கப்பட்டிருக்கிறது


அதில்தான்


தம் கரும்புரவியை


மேய்ந்து வரும்படிக்கு


அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்


கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்


வாசகன்


குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்


தேடி அலைகின்றனர்


கிழிந்து விழுந்த கானகத்தில்.


2


முழுவதும்


வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து


பறவைகள் பறந்துவிடுமென எண்ணி


அதன்


சிறகுகளை மட்டும்


வரையாமல் விட்டு வைக்கிறாய்.


பின்னொருநாள்


வெறிச்சோடிக்கிடக்கிறது


பறவைகளற்ற ஆகாயம்.


காணாமல் போய்விட்டது

உன் தூரிகை.


3


மலையடிவாரத்திற்கு


மேய்ச்சலுக்குச் சென்ற


எருமைகள் திரும்புகின்றன


அந்த மாலையின் இறுதியில்


புறவழிச்சாலையின் வழியே


ஊருக்குள் நுழைகிறது


இருள்


தன் கழுத்து மணியோசையை


எழுப்பியபடியே.

No comments: