Friday, May 22, 2009

உயிரோசை இதழ் 8 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்




1.அவன் சிலநேரம்


காற்றில்


அப்படியும் இப்படியுமாய்


வாளை வீசும்போது


அம்மரத்திலிருந்து


ஓரிரு இலைகள் உதிர்கின்றன.


*****
2.


எதிர்பார்த்தல் எதுவுமின்றி


நூறாண்டுக்குப்


பின்வருபவர்களுக்கும்


உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் .


நூறாண்டுக்கும் முன்


யாரோ புதைத்து வைத்த


ஒயின் பீப்பாயை


மண்ணிலிருந்து


தோண்டி எடுக்கும் போது .


*****
3.


பச்சைநிற வயற்பரப்பிலிருந்து


பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்


ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன


வசந்த காலத்தின்


ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .


*****
4.


கொஞ்சம் அரிசியையும்


கட்டுச் சுள்ளியையும்


கொடுத்து உதவினான் .


திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்


அவனுக்கு .


அது மட்டும் தான்


அது மட்டும் தான்


அளிக்க முடிந்தது என்னால்


அப்போதைக்கு .


*****
5.


ஆறு மாதத்திற்குப் பின்


இங்கே வந்திருக்கிறேன்


தியானத்திற்காய் .....


உதிர்ந்த இலைகள்


பொலிவிழந்த மரங்கள்


ஹோ .....


என் தியானம் எப்படிக் கழியும்


அமைதியுடன் .


*****
6.


வனாந்திரத்தில்


உதிர்ந்த பூக்களை மிதித்தபடி


மரத்திலிருக்கும் பூக்களை


ரசித்துக் கொண்டிருக்காதே .


அதனதன்


இயல்பிலிருக்கின்றன பூக்கள் .


*****
7.


வனத்தில் அமர்ந்து


சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .


மரங்கள்


அவற்றை தன் அருகிலிருக்கும்


துணைமரங்களுக்கு கைமாற்றி


விட்டுக் கொண்டிருந்தன .


*****
8.


தொடர்ந்து


இயற்கையை அவதானித்துக்


கொண்டிருந்தேன்....


.........தொடர்ந்து..


வயதாகி விட்டது .


என் மகனிடம்


கையளித்துவிட்டுசெல்கிறேன் .


மரங்களும்


தன் பங்கிற்கு


கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .


*****
9.


என்னோடு


இந்த தியானவிரிப்பின் மூலையில்


ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .


கண்களை மூடிதியானிக்கத் துவங்கினேன்


தியானம் இப்போது மூலையிலிருந்து


எறும்புகள் சாரைசாரையாய்


நகர்ந்து கொண்டிருந்தன


தியானத்தின் மேல் .


*****
10.


தியானத்திற்குப்பின்


மூன்று துறவிகளும்


ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .


குளித்து முடித்து


வெவ்வேறு கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .


முதல் துறவி சொன்னார் .


நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .


இரண்டாம் துறவி ........


நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.


மூன்றாம் ...........


நான் குளித்த கிணற்றில்


27தவளைகளும் ,


நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .


பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று


தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.

2 comments:

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா இருக்கு எல்லாமே.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாவ்....

இந்த வார்த்தை இங்கே பொருத்தமாக இல்லை. வேறென்ன சொல்வது? ஹ்ம்ம்ம்ம்.....

ஒன்றுமேயில்லை. மௌனத்தை விட இந்தக் கவிதைகளை வேறெந்த வார்த்தையால் சிலாகித்துவிடமுடியும்?

-ப்ரியமுடன்
சேரல்